Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பஞ்சாப்: பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்களிடம் பிரசாந்த் கிஷோர் போல தொலைபேசியில் பேசி பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் போல சில போலி நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். முதல்வர் அம்ரீந்தர் சிங்கை வெளிப்படையாக விமர்சித்து பேசுமாறும் சட்டப்பேரவைத் தேர்தலில் டிக்கெட் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக லூதியானா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் இதேபோல, காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் சிங் வயிட்டுக்கு பிரசாந்த் கிஷோர் போல தொலைபேசியில் பேசி வரும் தேர்தலில் குல்தீப் சிங் தொகுதியில் அவருக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுவதாக கணிப்புகளை தருவதாகவும் அதற்காக ரூ.5 கோடி தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.